திருபுவனம்


திருபுவனம் பேரூராட்சி
நவம்பர் 14, 2006, 9:43 மு.பகல்
கோப்பு வகை: Blogroll

திருபுவனம் பேரூராட்சியில் 1வது வார்டு சுயேட்சை வரலட்சுமி 192 ஓட்டு, 2வது வார்டு காங்கிரஸ் ருக்மணி 264, 3வது வார்டு சுயேட்சை குலாம் ரசூல் 111, 4வது வார்டு சுயேட்சை ராஜா 264, 5வது வார்டு தி.மு.க., மணி 211, 6வது வார்டு காங்கிரஸ் காமராஜ் 212, 7வது வார்டு தி.மு.க., மைதிலி 303, 8வது வார்டு தி.மு.க., தேசிகன் 169, 9வது வார்டு அ.தி.மு.க., ராஜசேகரன் 223, 10வது வார்டு சுயேட்சை சேதுராமன் 144, 11வது வார்டு ம.தி.மு.க., ஜெகதீஸ்வரி 253, 12வது வார்டு சுயேட்சை சாரதாம்பாள் 228, 13வது வார்டு சுயேட்சை குருமூர்த்தி 190, 14வது வார்டு காங்கிரஸ் கனகன் 323, 15வது வார்டு காங்கிரஸ் பாஸ்கர் 190 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றனர்.
நகர தி.மு.க. செயலாளர் ஆச்சி என்கிற திரு எஸ்.கே.பஞ்சநாதன் தம்பியும், திருவள்ளுவர் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருமான 5வது வார்டு திரு எஸ்.கே.மணி
பேரூராட்சி தலைவராகவும், 15வது வார்டு காங்கிரஸ் திரு பாஸ்கர் பேரூராட்சி துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.



செய்திகளில்
அக்டோபர் 7, 2006, 11:43 மு.பகல்
கோப்பு வகை: Blogroll

27-11-2006 தினமலர்

போலி நகைகளுக்கு பணம் குஜராத் கும்பல் கைவரிசைகும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் தெற்கு வீதியை சேர்ந்த பீர்முகமது என்பவர் கும்பகோணத்தில் ஷாப்பிங் கடை நடத்தி வருகிறார். இவரிடம் குஜராத்தை சேர்ந்த தணிபாய் மற்றும் அவரது மகன்கள் ராஜீவ், சங்கர் ஆகிய மூவரும் சேர்ந்து வியாபாரம் செய்ய பணம் கேட்டனர்.பணத்துக்கு பதிலாக தங்களிடம் உள்ள ஒரு கிலோ தங்க நகைகளை வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். அவர்கள் கொடுத்த ஒரு குண்டுமணி நகையை சோதித்து பார்த்தபோது அது சுத்தமான தங்கம் என தெரிந்ததால் ரூ.
ஒன்றரை லட்சம் கடந்த அக்.,10ம் தேதி தணிபாயிடம் பீர்முகம்மது வழங்கினார்.கும்பகோணம் இந்திரா நகர் ராஜேந்திரன் என்பவரிடம் தணிபாய் தங்க நகைகளை கொடுத்து பணத்தை பெற்றுச் சென்றுள்ளார். அவர் தங்க நகையை பரிசோதித்தபோது அவை போலி என தெரியவந்ததால், நேற்று முன்தினம் கும்பகோணம் மேற்கு போலீஸில் புகார் செய்தார்.பீர்முகம்மது தணிபாய் மற்றும் அவரது மகன்களை தேடினார். அவர்கள் மோசடி செய்துள்ளதாக தகவல் வந்ததும், தன்னிடம் உள்ள நகைகளை சோதித்து பார்த்தார். அவை அனைத்தும் போலியானது என்பது தெரியவந்தது. திருவிடைமருதூர் போலீஸில் புகார் செய்யப்பட்டது.””தணிபாய் மற்றும் அவர்களது மகன்கள் தனித்தனியாகவும், கூட்டாகவும் கும்பகோணம் பகுதியில் பல இடங்களில் இதேபோல மோசடியில் ஈடுபட்டுள்ளனர். கணக்கு பிரச்னை வரும் என்று கூறி பலர் புகார் கொடுக்க முடியாமல் பரிதவிக்கின்றனர்,” என போலீஸார் தெரிவித்தனர்.

2-10-06 தினமலர்
அ.தி.மு.க., வேட்பாளரை சுயேச்சையாக அறிவித்ததை கண்டித்து சாலைமறியல்

கும்பகோணம்: அ.தி.மு.க.,வேட்பாளர் என அங்கீகார கடிதம் கொடுத்தும் சுயேச்சையாக அறிவித்ததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 7வது வார்டு தி.மு.க., வேட்பாளராக மைதிலி பஞ்நாதன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். வனிதா ராஜேந்திரன் பாரதீய ஜனதா வேட்பாளராக வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார்.

தொடர்ந்து பாரதீய ஜனதாவில் அங்கீகாரம் கடிதம் பெறமுடியவில்லை. அ.தி.மு.க., வேட்பாளராக அங்கீகாரம் பெற்றுள்ளேன். இதனை ஏற்று அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று வனிதா தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை வைத்து கடிதத்தை கொடுத்தார். மேலதிகாரியிடம் கேட்டு இது தொடர்பாக தெரிவிக்கப்படும் என்று டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி செல்வம் தெரிவித்தார். வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட்ட அன்று வனிதா ராஜேந்திரன் சுயேட்சை வேட்பாளாராக அறிவிக்கப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க.,வினர் டவுன் பஞ்õசாயத்து முன்பு நிர்வாக அதிகாரியை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவலறிந்த திருவிடைமருதுõர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து அ.தி.மு.க.,வினரிடம் சமரசம் பேசியபின் கலைந்து சென்றனர்.
மேலும் அங்கு வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,பாரதிமோகன், ஒன்றிய செயலாளர் அசோக்குமார் ஆகியோர் அ.தி.மு.க., சின்னம் வழங்கும் படி வற்புத்தினர். நிர்வாக அதிகாரி செல்வம் அவ்வாறு வழங்க முடியாது என திட்ட வட்டமாக அறிவித்து சட்டகுறிப்பு ஆதாரங்களை காட்டி விளக்கினார்.

அ.தி.மு.க., சார்பில் யாரும் போட்டியிட முடியவில்லையே என ஆதங்கத்தில் கோபமடைந்த அ.தி.மு.க., வினர் சிலர் நிர்வாக அதிகாரியை போலீஸார் முன்னிலையிலே தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியும், கொலை செய்து விடுவோம் என பகிரங்கமாக மிரட்டலும் விடுத்தனர்.



ஊர் வரலாறு
செப்டம்பர் 21, 2006, 12:13 மு.பகல்
கோப்பு வகை: Blogroll
சோழர்களில் கடைசிப் பேரரசர் மூன்றாம் குலோத்துங்கன் தனக்கு மூவுலக சக்கரவர்த்தி எனப்பொருள்படும் திரிபுவன சக்கரவர்த்தி என்ற பட்டத்தை சூடிக்கொண்டான்.அவன் தனது பெயரில் கும்பகோணத்திற்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் ஒரு ஊரை நிர்மாணித்தான்.அது தான் திருபுவனம்.
இங்கு சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு)ஆலயமும் அவன் நிர்மாணித்தான்.உலகிலேயே இங்கு தான் சரபமூர்த்திக்கு(கம்பகரேஸ்வரர்க்கு) பிரேத்தியகமான ஆலயம் உள்ளது. சோழர் கால கட்டடகலைக்கு உதாரணமாக இவ்வாலயத்தையும்,தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தையும், தாராசுரம் ஐராவதீஸ்வரர்ஆலயத்தையும், கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தையுமே குறிப்பிடுகிறார்கள்.
பிற்காலத்தில் இங்கு காந்தியடிகள் பிறந்த கத்தியவார் என்றழைக்கப்படும் சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த நெசவாளர்கள் பெருமளவில் குடியமர்ந்தனர். இவர்களின் வழிப்பாட்டிற்காக ஒரு பெருமாள் கோவில் கட்டினர்.அதுதான் கோதண்டராமஸ்வாமி ஆலயமாகும். தமிழகத்திலேயே சௌராஷ்டிரா சமூக மக்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரே ஆலயமாகும்.
சௌராஷ்டிரா சமூகத்தைச் சார்ந்த சிறீமன் நடனகோபால நாயகி சுவாமிகளால் அமைக்கப்பட்ட நாலாயிரம் திவ்விய பிரபந்த பஜனை மடமும்,விராலிமலை சதாசிவ சுவாமிகளின் கிளை மடமும், பாண்டுரங்க பஜனை மடமும் உள்ளது. சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமான பத்மபிரகலதா நாடகசபை உள்ளது. இதன் சார்பில் ஆண்டுதோறும்
பத்மபிரகலதா தொடர்நாடகம் நடத்தப்படுகிறது.
சௌராஷ்டிரா சபைக்கு சொந்தமாக ஒரு உடற்பயிற்சி நிலையம் உள்ளது இதன் சார்பில் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான பளுதூக்கும் போட்டிகள் நடத்தப்படுகிறது.

சௌராஷ்டிரா சமூகத்தினருடன் இஸ்லாமியர், வன்னியர்,ஆதிதிராவிடர், செங்குந்தர்முதலியார், நாயுடு, பிள்ளைமார், இசைவேளாளர், யாதவர், பிராமணர், மருத்துவர், விசுவகர்மா, செட்டியார்ஆகிய சமூக மக்களும் வசித்து வருகின்றனர்.

இங்கு பெரிய பள்ளிவாசல், புதுமுஸ்லிம்தெரு பள்ளிவாசல்
ஆகிய இரு ஜூம்ஆ பள்ளிவாசல்கள் தனித்தனி ஜமாத்தாக இயங்கி வருகின்றன.

மேலும் பிள்ளையார், காளியம்மன், மாரியம்மன், ஆஞ்சநேயர், அய்யனார், திரௌபதிஅம்மன், பிடாரியம்மன், போன்ற சிறு தெய்வ கோவில்கள் ஆங்காங்கு உள்ளன.
மூன்று தொடக்கப்பள்ளிகளும், ஒரு அரசினர் உயர்நிலைப் பள்ளியும் திகோ சில்க்ஸ் பெண்கள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளியும், திகோ சில்க்ஸ் ஆண்கள் மெட்ரிகுலேசன் உயர்நிலைப் பள்ளியும், இந்தியன் நர்சரி பிரைமரி பள்ளியும் உள்ளன.

இங்கு நெசவாளர்கள் கணிசமாக வசிக்கின்ற காரணத்தால் பட்டு நெசவுத் தொழில் சிறப்புற்று விளங்குகிறது. பல கூட்டுறவு சங்கங்கள் அமைத்து அரசு பட்டுச்சேலைகளை உற்பத்தி செய்து சங்கத்தின் மூலமே விற்பனை செய்து வருகிறது. இங்கு உள்ள திகோ சில்க்ஸ் என்றழைக்கப்படும் திருபுவனம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கம் தான் இந்தியாவிலேயே அதிக விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கமாகும். இந்த ஆண்டு மட்டும் முப்பத்தி மூன்று கோடி ரூபாய் விற்பனை செய்துள்ளது